Tuesday, January 18, 2011

பசு பராமரிப்பின் மான்மீயம்

மனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது, 

காவோ வை ஸர்வா தேவதா: 

 என்பதாக பசுவின் உடலில் வால் நுனியிலிருந்து கால் குளம்பிலிருந்து கொம்பின் நுனிப்பகுதி வரை ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தெய்வம் வாஸம் செய்வதாக நமது சாஸ்திரம் தெரிவிக்கிறது,

கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் 

பசுவுக்கும் வேதம் கற்ற அந்தணர்களுக்கும் எப்போதும் மங்களம் உண்டாகட்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறோம், கோ ப்ராஹ்மண ஹிதர் (பசுவுக்கு நன்மையைச் செய்பவர்) என்றும் கோபாலர் கோவிந்தர் (பசுவை பாதுகாப்பவர்), என்றும் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் பாலலீலை செய்த இடம் கோகுலம் என்று அழைக்கப்படுகிறது,
பசுவை பராமரிக்கும் (யாதவ) குலத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். கோ வை பராமரிக்கும் குலத்தில் பிறந்த கோபிகளே ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.

பசுமாடு நமக்கு பால் (தயிர் நெய்) தந்து உதவுகிறது, பசுவின் சாணமும் மூத்திரமும் அனைத்தையும் சுத்திசெய்யும் தன்மை வாய்ந்தது, ஆகவேதான் பசுவின் பால் தயிர் கோமயம் கோமூத்திரம் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகவ்யம் என தயார் செய்கிறோம், பஞ்சகவ்யமானது அதைச் சாப்பிடுபவரின் உடல் தோல், மாம்ஸம், ரத்தம், மற்றும் எலும்புப் பகுதி வரை உள்ள பாபங்களை (அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல்) எரித்து விடுகிறது என்கிறது சாஸ்திரம். (கலியுக தர்ம சாஸ்திரமான  பராசர ச்மிரிதி )

கோமூத்திரத்தை சிறிது தலையில் தெளித்துக் கொள்வதே கங்கா ஸ்நானம் செய்த பலன், பசுவை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்வதால் பூ (உலகம் முழுவதும்) பிரதக்ஷிணம் செய்த புண்யம், பசுவை பூஜித்தால் ப்ருஹ்மா விஷ்ணு ருத்ரர் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்யம்,
கோக்ராஸம் (பசுவிற்கு புல் கொடுத்தல்), கோகண்டூயனம் (பசுவிற்கு கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தல்) மஹா பாபத்தையும் போக்கடிக்கும்,

பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்பும் ஸந்த்யாகாலம் மிக பவித்ரமான கோதூளி காலம் (லக்னம்) எனப்படுகிறது, பசு நடக்கும் போது எழும் புழுதி மேலே படுவது எட்டுவகை ஸ்னானங்களில் ஒன்றாகும், மா என்று கத்தும் பசுமாட்டின் சப்தம் அந்தப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது என்கிறது வேதம்,
கவாம் கோஷ்டே தகுணம் என்பதாக பசுமாட்டின் அருகில் பசுவஸிக்குமிடத்தில் அமர்ந்து செய்யும் மந்திரஜபம் மற்றும் தர்ம கார்யங்களுக்கு நூறு பங்கு பலன் .

மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு , யமன், யம தூதர்கள், பசு மாட்டின் கண்களுக்கு மட்டும் தெரிவார்கள், ஆகவே தான் ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது,

பர (யம) லோகத்துக்கு (யம) தூதர்களால் அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வெந்நீர் ஓடும் வைதரணீ என்னும் நதியைத் தாண்ட முடியாமல் தவிக்கும் போது (தானம் செய்யப்படும்) பசுமாடு வந்து உதவுகிறது, அதன் வாலைப்பிடித்துக் கொண்டு ஜீவன் வைதரணீ நதியைக் கடக்கிறான் என்கிறது கருட புராணம்,

இன்னும் ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு (நாகரீக வளர்ச்சியால்) ஏற்படும் சில இயற்கை மாறுதலால் உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் வெளியிட்டுள்ள ஓர்ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது,

ஆகவேதான் பசுக்களின் பெருமைகளை நன்கு புரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பசுமாட்டை வளர்த்து பாதுகாத்து வந்தார்கள், தற்சமயமும் பலர் ஆங்காங்கே கோசாலைகள் நிறுவி மொத்தமாக பசுவைப் பாதுகாக்கிறார்கள், முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள்,.

ஆனால் வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை வெளி மாநிலத்துக்குக் கொண்டு சென்று துன்புறுத்துகிறார்கள் வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது,

கோஹத்தி மிகப்பெரும் மஹாபாபம், அதைச்செய்வபருக்கு தனியான நரகம் உண்டு, பசுவின் பெருமைகளை உணர்த்தி, பசு துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,

தற்சமயம் ஒரு சிலர் பசுவை (துன்புறுத்த) அழைத்துச்செல்வதை தடுத்து நிறுத்தி ஓரிடத்தில் வைத்து (ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பாராமல்) பாதுகாத்து வருகிறார்கள், பசுவை பாதுகாப்பது மிகப்பெரும் புண்யம், தர்மம், அது குடும்பத்தையே தேசத்தையே பாதுகாக்கும், இவர்களுக்கு ஆதரவு தந்து உதவ வேண்டும்,

பசுக்கள் பாதுகாக்கப்படும் கோசாலைகளுக்குசென்று பசுக்களை பூஜை செய்து ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்வதுடன், பசு இருக்குமிடத்தை சுத்தப்படுத்துதல் பசுவுக்கு சொறிந்து தந்து புல்தந்து சுச்ரூஷையும் செய்யலாம்,

பசுவிற்கு பணிவிடை செய்ததால்தான் வெகு நாட்களாக குழந்தை இல்லாதிருந்த திலீபன் ஸுதக்ஷிணை தம்பதிகளுக்கு நல்ல புத்ரன் பிறந்தான் என்கிறார் காளிதாஸர்,

எங்கு பசுக்கள் பக்தியுடன் பராமரிக்கப்படுகிறதோ அங்கு மஹாலக்ஷ்மி உள்பட அனைத்து தேவதைகளும் ஸான்னித்யமாக இருப்பார்கள், மங்களமும் ஆரோக்யமும் ஏற்படும்,

ஆகவே ஆங்காங்கே பால் (கறவை) நின்ற வயதான பசுக்கள் துன்புறுத்துவது நிறுத்தப்பட்டு, பசுக்களின் மஹிமைகளை தெரிந்து கொண்டு பசுவை கோமாதாவை பாதுகாத்து பூஜித்து தேசத்துக்கும் மனித ஸமூகத்துக்கும் நன்மையைச் செய்ய ஸ்ரீ பகவான் அனுகிரஹிக்கட்டும்.